எம்.ஜி.ஆர் நடித்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் சென்னையில் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டது. இப்படத்தை காண தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.

பல ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் இத்திரைப் படம் நேற்று மூன்று தியேட்டர்களில் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டது. சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அன்னை ஆபிராமி தியேட்டரில் இப்படத்தை காண ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. வயதானவர்கள் மட்டுமின்றி இளைஞர்களும் இப்படத்தை ஆர்வமுடன் கண்டுகளித்தனர். ஒரு சிலர் தங்களது குடும்பத்துடன் இப்படத்தை காண வந்திருந்தனர். எம்.ஜி.ஆர். ரசிகர்கள் சிலர் தியேட்டருக்கு வெளியே டிஜிட்டல் பேனர்களையும் வைத்திருந்தனர்.

இப்படத்தை காண வந்த புரசைவாக்கத்தை சேர்ந்த என்.சந்திரபாபு என்பவர் கூறுகையில், கடந்த 1966 ஆம் ஆண்டு மேகலா தியேட்டரில் இப்படம் ரிலீஸ் செய்யப்பட்டது. அன்று முதல் இன்று வரை 100 முறைக்கும் மேல் இப்படத்தை பார்த்திருக்கிறேன். எத்தனை முறை பார்த்தாலும் எனக்கு அலுக்கவே இல்லை. இத்தியேட்டரில் இருந்து இப்படத்தை மாற்றுவதற்குள் 10 முறையாவது பார்த்து விட வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறேன் என்றார்.
தாமஸ் மலையை சேர்ந்த பார்த்தசாரதி என்பவர் கூறுகையில் 'என்னிடம் இப்படத்தின் சிடி இருக்கிறது. இருந்தாலும் மற்ற ரசிகர்களோடு தியேட்டரில் அமர்ந்து படம் பார்க்கும் போது ஆர்வம் அதிகரிக்கிறது' என்றார்.
இது குறித்து மேலும் சிலரிடம் கேட்டபோது படத்தில் வரும் "அதோ அந்த பறவை போல" என்னும் பாடலை கேட்கும் போது நாட்டின் சுதந்திரத்திற்காக பாடப்பட்ட பாடல்களை கேட்கும் உணர்வு வெளிப்படுகிறது என தெரிவித்தனர்.